எரிமலை வாசல் பூ
உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, 'ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா ?' என்ற குரல் நிச்சயம் முன்பரிச்சயமானதாக இல்லை.
'ஸ்பீக்கிங்' என்றேன் சுருக்கமாய், இத்தனை உரிமையாய் பேசத் துவங்கும் அந்தக் குரலை இதற்குமுன் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா என்று அவசரமாய் நினைவடுக்குகளில் தேடிப்பார்த்தும் பலனில்லை. யாராய் இருக்கும் ?
அந்தக் குறுகுறுப்பு ரொம்பவும் நீடிக்கவில்லை, என் குழப்பத்துக்கான பதில் அந்த ரமேஷிடமிருந்தே வந்தது, 'வணக்கம் சார், என்னை உங்களுக்கு நினைவிருக்கா தெரியலை, ஆனா சில வருடங்கள்முன்னால நமக்குள்ள கடிதப் போக்குவரத்து இருந்தது, அப்ப நான் சில பத்திரிகைகள்ல கவிதைகள், கதைகள்லாம் எழுதிட்டிருந்தேன், எரிமலை வாசல் பூ-ங்கற புனைபெயர்ல'
'எரிமலை வாசல் பூ' என்கிற அந்தப் பதத்தைக் கேட்டதும், 'ஆஹா' என்னும் வார்த்தை என்னிடமிருந்து அனிச்சையாய் வெளிப்பட்டது, 'இப்ப ஞாபகம் வருது மிஸ்டர். ரமேஷ்' என்றேன் பரவசமாய், 'ஸாரி, உங்க புனைபெயர் ஞாபகமிருக்கிற அளவு, உங்க நிஜப்பெயர் மனசில தங்கலை'
'அதனால என்ன சார் ?' என்று சொல்லி லேசாய்ச் சிரித்தவன், 'நல்லாயிருக்கீங்களா சார் ?' என்றான் நெடுநாள் பழகினவன்போல்.
'இருக்கேன் ரமேஷ், நீங்க எப்படி இருக்கீங்க ?', பதில் உபசரணை முடிந்ததும் சட்டென்று, 'எங்கயிருந்து பேசறீங்க ?' என்றேன், 'ஏன் இப்பல்லாம் நீங்க எழுதறதே இல்லை ?'
என் கடைசிக் கேள்வியைச் சௌகர்யமாய்த் தவிர்த்து, 'இன்னிக்கு பெங்களூர்ல ஒரு இன்டர்வியூவுக்காக வந்தேன் சார், நைட் பஸ்ல திரும்பிப் போறேன், அதுக்குள்ள உங்களைப் பார்க்கமுடிஞ்சா நல்லாயிருக்கும்' என்றான் தணிந்த குரலில், நான் பதில் சொல்வதற்குள், 'உங்களுக்கு நேரம் இருக்கும்ன்னா பார்க்கலாம் சார், எனக்காக சிரமப்படவேண்டாம்'
'அவசியம் சந்திக்கலாம் மிஸ்டர். ரமேஷ்', என்றேன் அவன் மேலும் பேசுவதற்குள், 'இப்ப நீங்க எங்க இருக்கீங்க ?'
'ஏர்போர்ட் ரோட்ல ஏதோ ஒரு சந்தில இருக்கேன் சார், நீங்க எப்ப ·ப்ரீயா இருப்பீங்க-ன்னு சொல்லுங்க, அப்படியே உங்க ஆ·பீஸ் அல்லது வீடு எங்க இருக்கு, அதுக்கு பஸ் ரூட் என்ன-ன்னும் சொல்லிட்டீங்க-ன்னா, நீங்க சொல்ற டயத்துக்கு பஸ்ஸைப் பிடிச்சு வந்துடுவேன்'
'நீங்க எப்ப வேணும்ன்னாலும் வரலாம் ரமேஷ்', கொஞ்சம் யோசித்து, 'இப்பவே கிளம்பி வாங்களேன், உங்களோட நிறைய பேசணும்போல இருக்கு' என்றேன்.
'கண்டிப்பா வர்றேன் சார், அட்ரஸ் – பஸ் நம்பர் சொல்லுங்க' என்ற அவனுடைய அவசரம் கலந்த பதட்டம் எனக்கு வேடிக்கையாய் இருந்தது, 'ஏர்போர்ட் ரோட்லயிருந்து எங்க ஆ·பீசுக்கு நேரடி பஸ் இல்லைன்னு நினைக்கறேன் ரமேஷ், நீங்க ரெண்டு அல்லது மூணு பஸ் மாறவேண்டியிருக்கும்', கொஞ்சம் யோசித்து, 'நீங்க ஆட்டோவில வந்துடுங்களேன்' என்றேன்.
ரமேஷிடமிருந்து உடனடியாக பதில் வரவில்லை. சற்றுப் பொறுத்து, 'ஓகே சார், நோ ப்ராப்ளம்' என்றான், 'நீங்க அட்ரஸ் சொல்லுங்க சார், ஆட்டோக்காரர்கிட்ட எந்த இடம் குறிப்பிட்டு சொல்லணும்-ன்னும் தெரிஞ்சா கண்டுபிடிக்க ஈஸியா இருக்கும்'
என் அலுவல் முகவரியையும், கண்டறியும் வழிமுறைகளையும் விரிவாய் சொன்னேன், சரசரவென்று ஒரு பேப்பரில் எழுதுகிறாற்போல் மறுமுனை சப்தம் கேட்டது. அதன்பின், 'நான் உடனே கிளம்பி வர்றேன், தேங்க்யூ ஸார்' என்று ·போனை வைத்துவிட்டான்.
நான் ரிசீவரை அதனிடத்தில் கவிழ்த்துவிட்டு, சொகுசு இருக்கையில் ஒருமுறை சுழன்று, சாய்ந்துகொண்டேன், 'எரிமலை வாசல் பூ' என்று மெலிதாக சொல்லிப்பார்த்தேன். எத்தனை அழகான, கவித்துவமான பெயர் !
இந்த ரமேஷின் கவிதைகளையோ, கதைகளையோ படிப்பதற்குமுன்னாலேயே, அந்தப் புனைபெயர் என்னவோ மாயம் செய்து உள்ளே ஈர்த்துவிட்டது, அந்தப் பரிச்சய உணர்வோடு அப்படைப்புகளில் நுழையும்போது, எளிதில் அவற்றோடு ஒன்றமுடிந்தது. நுணுக்கமான அனுபவங்களை, நல்ல கருத்துகளை, தெளிவான மொழிநடையில் எளிமையாக சொல்லும் இந்தப் படைப்பாளி ஒரு இளைஞர் என்று தெரிந்தபோது, இன்னும் அணுக்கமாய் உணர்ந்தேன். 'எரிமலை வாசல் பூ'வின் கதைகளை, கவிதைகளைத் தேடிப்ப(பி)டிக்க ஆரம்பித்தேன். தெரிந்தவர்களிடமெல்லாம் வெளிப்படையாய் சிபாரிசு செய்ய / பாராட்டலானேன்.
அப்போது நானும் பெயர்சொல்லும்படி நிறைய எழுதிக்கொண்டிருந்த நேரம் என்பதால், ரமேஷ் என்னுடைய இளைய தலைமுறையாய்த் தெரிந்தார். அவரைத் திறந்த மனதோடு பாராட்டுவது, ஒருவிதத்தில் என்னுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று லேசான ஒரு கர்வமும் இருந்தது உண்மை. ஆனால் அதையும் மீறி, ரமேஷின் படைப்புகளால் நான் வெகுவாய் ஈர்க்கப்பட்டதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.
ஒரே ஒருமுறை எரிமலை வாசல் பூவுக்குக் கடிதம்கூட எழுதியிருக்கிறேன். அந்தப் புதுமையான புனைபெயர் என்னை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது என்று முதல் வரி எழுதிவிட்டு, அதன்பின் அவருடைய சமீபத்திய (அப்போதைய) சில படைப்புகளைச் சுருக்கமாய் விமர்சித்து, இன்னும் நிறைய எழுதுங்கள் என்று ஊக்குவித்தாய் ஞாபகம்.
அதற்கு அவர் எழுதிய பதிலும் நன்றாக நினைவிருக்கிறது. 'பொங்கி அடங்கிய எரிமலையொன்றின் திறப்பில், ஒரு சிறிய பூச்செடி முளைத்திருப்பதுபோலவும், அதில் ஒரு அழகான பூ மலர்ந்திருப்பதாகவும் என் நண்பர் ஒருவர் வரைந்த அற்புதமான ஓவியம், அதுதான் என்னை இந்தப் பெயரைத் தேர்ந்தெடுக்கச் செய்தது, எரிமலை என்பதை புரட்சி, கோபம், ஆவேசம் ஆகியவற்றின் சின்னமாகவும், பயமின்றி அதன் வாசலில் மலர்ந்திருக்கிற பூவை, இன்னும் இப்புவியில் மிச்சமிருக்கிற அமைதியின், நேசத்தின், மனிதாபிமானத்தின் அடையாளமாகவும் பார்க்கிறேன்' என்று முக்கால் பக்கத்துக்குமேல் விளக்கம் கொடுத்துவிட்டு, கடைசியில், போனால் போகிறது என்று எழுதுவதுபோல், 'என் கதைகளைப் பாராட்டி எழுதியிருந்தீர்கள், மிக்க நன்றி' என்று அலட்சியமாய் ஒரே ஒரு வரி. அந்த கலைக் கர்வம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது !
ஆனால், அதன்பின் திடீரென்று 'எரிமலை வாசல் பூ', நான் தொடர்ந்து வாசிக்கிற இதழ்களிலிருந்து மெல்லத் தேய்ந்து உதிர்ந்துவிட்டது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் அந்தப் பெயரை எங்கேயும் பார்த்ததாய் நினைவில்லை, ஒருவேளை ஏதும் இயக்கம் சார்பாய் ஈர்க்கப்பட்டு அந்த வகையிலான பத்திரிகைகளில்மட்டும் எழுதுகிறாரா ? அல்லது நான் சந்தா செலுத்தாத ஒரு இலக்கியப் பத்திரிகையில் சம்பளத்துக்கு எழுதச் சேர்ந்துவிட்டாரா ? இதை யாரிடமும் விசாரிக்கத்தோன்றவில்லை என்பது இப்போது வெட்கமாய் உணரச் செய்தது. உண்மையில், 'எரிமலை வாசல் பூ' என் பார்வை எல்லைகளிலிருந்து காணாமல் போனதுகூட, இந்தத் தொலைபேசி அழைப்புக்குப்பின்னரே என் கவனத்துக்கு வந்திருக்கிறது.
எல்லாப் பாவங்களையும், ஒரு மனப்பூர்வமான பிரார்த்தனை நேர்செய்துவிடுவதுபோல, இந்த இழப்புகளையெல்லாம் இன்றைய சந்திப்பு சரியாக்கிவிடும் என்று நிச்சயமாய்த் தோன்றியது. உள் தொலைபேசியை எடுத்து, என் உதவியாளரிடம் இரண்டு 'மிரிண்டா'க்களுக்குச் சொன்னேன், 'ரமேஷ்-ன்னு ஒருத்தர் என்னைப் பார்க்க வருவார், அவரை நேரா உள்ளே அனுப்பிடுங்க', இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஏஸியின் அளவைச் சற்றே குறைத்துவைத்தேன். அதன்பின் வேலையில் மனம் ஓட மறுத்தது. சாப்பிடவும் தோன்றவில்லை.
அறைக் கதவை மரியாதையான தொனியில் லேசாய்த் தட்டிவிட்டு ரமேஷ் உள்ளே வந்தபோது மணி இரண்டே கால். நான் எதிர்பார்த்ததைவிட இளைஞனாய், கச்சிதமான உடையலங்காரம், மழுமழு முகத்தில் தோழமையுணர்வு பொங்கிப் பெருக, கம்பீரமாய்க் கைகுலுக்கினான், 'உங்களை சந்திச்சதில ரொம்ப மகிழ்ச்சி சார்' என்று சொன்ன கையோடு தொடர்ந்து, 'உங்களோட முக்கியமான வேலை எதுக்கும் நான் இடைஞ்சலா வந்துடலைன்னு நம்பறேன்' என்றான் சம்பிரதாயமாய்.
'அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை ரமேஷ், ப்ளீஸ் டேக் யுர் ஸீட்', என் டேபிளின் எதிரிலிருந்த ஒரு இருக்கையில் அவனை அமரச் செய்துவிட்டு, நான் என்னுடைய இடத்தில் உட்கார்ந்தபோது, ஏதோ ஒரு அலுவல் தோரணை எங்களுக்கிடையில் குறுக்கிட்டதாய் உணர்ந்தேன், 'எங்க ஆ·பீஸை ஈஸியா கண்டுபிடிக்க முடிஞ்சதா ரமேஷ் ?' என்று இயல்பாய் விசாரித்தபடி எழுந்து நடந்து, அவனருகிலிருந்த இன்னொரு சீட்டில் அமர்ந்துகொண்டேன்.
'அதெல்லாம் ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை சார்' என்று வசீகரமாய்ச் சிரித்தான் அவன், 'இங்க ஒரு இன்டர்வியூவுக்காக வந்தேன், அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போகலாம்ன்னு …'
'ரொம்ப சந்தோஷம் ரமேஷ், நீங்க என்னை நினைவில வெச்சிருந்து கூப்பிட்டதுக்கு', என்றபோது, உதவிப் பெண் குளிர் பானங்களை வைத்துப் போனாள்.
அதன்பின் சில நிமிடங்கள் பொதுவான குடும்ப விசாரிப்புகள், சமீபத்தில் படித்த நூல், பிடித்த நூல் முதலான இலக்கிய விவாதங்களில் கரைந்தன. அநேகமாய் என்னுடைய எல்லாப் புத்தகங்களையும் அவன் வாசித்திருக்கிறான் என்பது எனக்கு இனிய ஆச்சரியமாய் இருந்தது. ஒவ்வொன்றைப் பற்றியும் சில நிமிடங்களுக்காவது பேசுமளவு அழுத்தமான விமர்சனக் கருத்துகள் வைத்திருந்தான், 'உங்களுக்கு என்ன வயசாகுது ரமேஷ் ?'
'இருபத்தி நாலு சார்', மீண்டும் ஒரு சிரிப்பு.
'மை காட், அப்ப எந்த வயசில எழுத ஆரம்பிச்சீங்க ?', அவனுடைய எழுத்து முதிர்ச்சியோடு, இந்த முகத்தையோ, வயதையோ சம்பந்தப்படுத்திப் பார்க்கமுடியவில்லை. ஆனால் அவனோ, நான் வாசித்திருக்கும் அவனுடைய படைப்புகளெல்லாம் அவனது கல்லூரி நாள்களிலேயே எழுதப்பட்டவை என்று சாதாரணமாய்ச் சொன்னான். தொடர்ந்து, 'வயசு என்ன சார் வயசு' என்றான் குரலிறக்கி, 'ஏதோ எழுதினேன், சிலருக்குப் பிடிச்சிருந்தது, அந்த சந்தோஷம்தான்'
'பட், இப்ப நீங்க ஜாஸ்தி எழுதறதா தெரியலையே ரமேஷ், ஏன் ?', வெகுநேரமாய் உள்ளே உறுத்திக்கொண்டிருந்த அந்த சந்தேகத்தைக் கேட்டுவிட்டேன்.
சற்றே தயக்கத்துடன் வீசப்பட்ட அந்தக் கேள்விக்கு, 'யார் அப்படிச் சொன்னது ?' என்று ஆவேசமாய்ப் பொங்கியெழுந்து, அவன் சமீபத்தில் எழுதின கதை, கவிதைகளைப் பட்டியலாய் ஒப்புவிப்பான் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவன் அமைதியாய், 'ஆமாம் சார்' என்றான். கையிலிருந்த குளிர்பானத்தைக் கீழே வைத்துவிட்டு இடது உள்ளங்கை ரேகைகளை வலது ஆள்காட்டி விரலால் வருட ஆரம்பித்தான்.
நான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் கேட்டேன், 'உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, அதுக்கான காரணத்தை நான் தெரிஞ்சுக்கலாமா ரமேஷ் ?', அவனை ஒருமுறை ஆவலோடு பார்த்துவிட்டு, 'உங்க எழுத்துகளைத் தொடர்ந்து வாசிச்சேன்-ங்கற அக்கறையிலதான் கேட்கிறேன், உங்களைமாதிரி ஆர்வமுள்ள, நல்ல எழுத்தாளர்கள், இளைஞர்கள் எந்தக் காரணத்துக்காகவும் எழுதறதை நிறுத்திடக்கூடாதுங்கறது என்னோட ஆசை !'
அதன்பின் பல விநாடிகளுக்கு, அந்த அறையை ஒரு அழுத்தமான மௌனம் ஆக்கிரமித்துக்கொண்டது. வெகுநேரம் கழித்துதான் அவன் பேசினான், ஏதோ ரகசியம் சொல்வதுபோல் மெலிதாய்க் கசிந்த குரல், 'எழுதறதெல்லாம் சந்தோஷம்தான் சார், ஆனா அதைப் படிச்சுப் பாராட்டறவங்க, உடனடியா அடுத்த கேள்வி, 'நீங்க இப்ப என்ன செஞ்சுட்டிருக்கீங்க ரமேஷ் ? எங்கே வேலையில இருக்கீங்க ?'ன்னு கேட்கும்போது அந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியலையே சார்'
அவனது இந்த பதிலையும், அவன் முகத்தில் சட்டென்று பரவின சோகத்தையும் நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதற்கு என்ன எதிர்வினை செய்வது என்றுகூட புரியாமல் நான் திகைத்திருக்கையில் அவன் தொடர்ந்து பேசினான், 'நானும் ரெண்டரை வருஷமா ஒரு நல்ல வேலை தேடிகிட்டிருக்கேன் சார், நல்ல வேலை-ன்னு சொல்றதுகூட தப்பு, இப்ப அந்த எதிர்பார்ப்பு, ஆசையெல்லாம் எங்கயோ காணாம போயிடுச்சு, ஓட்டையோ, உடைசலோ, எதுனா ஒரு வேலை கிடைச்சுட்டாப் போதும்ன்னு தோணுது, நான் மெட்ராஸ்ல தங்கி வேலை தேடறதுகூட எங்க அப்பா – அம்மாவுக்குப் பிடிக்கலை, ஊருக்கே வந்துடு-ன்னு பாடாப் படுத்தறாங்க, அவங்க சொல்றதும் நியாயம்தான், நாம சம்பாதிச்சு பேரன்ட்ஸ¤க்கு சோறுபோடவேண்டிய வயசில, அவங்ககிட்டயிருந்து மாதாந்திர அலவன்ஸ் எதிர்பார்க்கிறது தப்புதான், இல்லையா ?'
நான் சங்கடமான ஆமோதிப்பாய்த் தலையசைத்தேன், ஆனால் ஏதும் பேச முடியவில்லை.
'என்னோட தங்கியிருக்கிற ·ப்ரெண்ட்ஸ் ஒருத்தருக்கும் இலக்கிய ஆர்வம் கிடையாது சார், அதுக்காக நாம அவங்களைக் குறை சொல்லிடமுடியாது, ஆனா எப்பவாச்சும் டைம் கிடைக்கும்போது டைரியை எடுத்துகிட்டு எதுனா எழுத உட்கார்ந்தா, "அந்த நேரத்தில ஜாவா-வில நாலு விஷயம் படிச்சுவெச்சா எதிர்காலத்துக்கு ஆவும்ல ?"ன்னு அவங்க யதார்த்தமா சொல்லும்போது, அந்த நிதர்சனத்தை மறுக்கவும் முடியாம, ஏத்துக்கவும் முடியாம, திறந்த டைரியோட அல்லாடறது இருக்கு பாருங்க, அது பெரிய கொடுமை சார்', என்றவன் சற்றுப்பொறுத்து, 'அதான் டைரியை மூடிவெச்சுட்டேன்' என்றான்.
'புரியுது மிஸ்டர். ரமேஷ்' என்று தணிந்த குரலில் சொன்னேன், 'ஆனா, இப்படி ஆயிரம் கஷ்டங்களோட எழுதறது நமக்கொண்ணும் புதுசு இல்லையே, அன்றாடக் கவலைகள் தன்னைத் தின்னுடுமோ-ன்னு பாரதிகூட கலங்கியிருக்கான் சார், நாமெல்லாம் எம்மாத்திரம் ?', அந்தச் சமாதானம் போதாது என்று எனக்கே புரிந்ததோடு, காரணமில்லாத ஒரு குற்றவுணர்ச்சியும் என்னை ஆட்கொண்டது. அறையின் பழக்கமான ஏஸி குளிரிலும் லேசாய் உடல் நடுங்கியதுபோலிருந்தது.
என் வாதத்தை ஏற்கமுடியாத பாவனையில் உதடுகளைப் பிதுக்கினான் ரமேஷ், 'நான் பாரதியார்மாதிரி மகான் கிடையாது சார், சாதாரண மனுஷன், நான் விரும்பினாலும், விரும்பாட்டியும், என்னைச் சுத்தியிருக்கிறவங்கதான் என்னைத் தீர்மானிக்கறாங்க' என்றான் தொடர்ந்து. முகத்தில் வேதனைச் சாயல்.
'கவலைப்படாதீங்க ரமேஷ், சீக்கிரமே உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும், நீங்க மறுபடி பழைய வேகத்தோட எழுத ஆரம்பிச்சுடுவீங்க பாருங்க', என்று அவனைத் தேற்றினபோது, 'வேலை தேடறது வேற, இலக்கியம் வேற, இதுக்காக நீங்க அதை விட்டுக்கொடுக்கறது தப்பு' என்று என்னால் ஏன் அடித்துச் சொல்லமுடியவில்லை ?
அந்தத் தேற்றுதல்போலவே, அதைத் தொடர்ந்த எங்களுடைய பேச்சுகள் யாவும் செயற்கையாகவே அமைந்துவிட்டதாய்த் தோன்றியது – இயல்பாய் ஆடியோடிச் சென்றுகொண்டிருந்த நதியின் பாதையில் யாரோ ஒரு பெரிய அணைக்கட்டை எழுப்பிவிட்டாற்போல் !
என்னோடு மதிய உணவுண்ணுமாறு அவனை அழைத்தேன், ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டதாக சொல்லிக் கிளம்பினான் அவன், 'உங்களை சந்திச்சது ரொம்பரொம்ப சந்தோஷம் சார், நான் எந்த விதத்திலயாவது உங்களை டிஸ்டர்ப் பண்ணியிருந்தா தயவுசெஞ்சு மன்னிக்கணும்'
'அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை ரமேஷ், நைஸ் மீட்டிங் யு', அழுத்தமாய்க் கைகுலுக்கி, என்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன், 'அடிக்கடி கடிதம் எழுதுங்க' என்று வேண்டிக்கொண்டு அவனை வாசல்வரை சென்று வழியனுப்பினேன், 'நம்பிக்கையைமட்டும் இழந்துடாதீங்க ரமேஷ், ஆல் தி பெஸ்ட்' என்றபோது, எப்போதுமான சிரிப்போடு தலையசைத்தான் அவன்.
தோளில் மாட்டிய சிறிய பயணப் பையுடன் தளர்ந்து நடக்கிறவனை, சில விநாடிகளுக்குக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசியாய் நான் வாசித்த – கடைசியாய் அவன் எழுதியதாகக்கூட இருக்கலாம் – அவனது கவிதையின் சில வரிகள் பளிச்சென்று நினைவுக்கு வந்தது.
அடங்கிய எரிமலை,
என்றேனும் பொங்கும்,
அன்று, இந்தப் பூ
என்னவாகும் ?
very very nice and fantastic
fine, good story, with good message also i get it.
What a story ! Very Very nice fentastic…
நான் விரும்பினாலும், விரும்பாட்டியும், என்னைச் சுத்தியிருக்கிறவங்கதான் என்னைத் தீர்மானிக்கறாங்க’
இந்த வரிகளின் உண்மையை அனேகம் பேர் உணர்வதில்லை…
அடங்கிய எரிமலை,
என்றேனும் பொங்கும்,
அன்று, இந்தப் பூ
என்னவாகும்
அருமையான வரிகள்…
நன்றி கதைக்கு….
touching story
so so cute fouching story
Realistic story,Simply superb
not bad
Very good story.
Ilainargalukku oru urchagamuttum marunthu
simpe & supper , some times that’s true ,
நான் விரும்பினாலும், விரும்பாட்டியும், என்னைச் சுத்தியிருக்கிறவங்கதான் என்னைத் தீர்மானிக்கறாங்க’ nice line
நல்ல கதை
எலோருக்குள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறான் ஆனால் அனைவரையும் சூழ்நிலைதான் திசை மாற்றி வைக்கிறது.. எரிமலை வாசல் பூவை போல இன்னும் எத்தனையோ பேர் வாசம் வீச முடியாத தவிப்புடன் ஜீவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்
supper
nengale oru job kuduthu erukalam sir
nice…
Arputhama ilakiavathikal nilamaia solli irukinga
not bad
padithu mudithu veleai thedum ilaignargalin aanmave ikkadhi…
very good story
ஒரு படைபாளியின் உணர்வும் , வேலை இல்லாத இளைஞனின் மன உணர்வும் … மனதை மிகவும் பாதித்த கதை ,இல்லை உண்மை என்று கூட சொல்லலாம்
Very good story……
super
this is what happening nowadays …
very practical story….
really i like very much the stroy so good
Realy nice…
Practical story
Very good.
Superb story….